"நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்கு வலிமையையும் ஓய்வையும் கொடுப்பேன்." எரேமியா 31:25

அவரில் நம்பிக்கை கொண்டிரு

“நாம் பலமென்றும், மூலதனமாகவும் நம்பிக்கொண்டிருந்தவைகள் எல்லாமே நம் விருப்பத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் மாறாகச் செல்லும்போது, நம் மனம் அல்லது ஆன்மா களைத்துப் போகிறது, சோர்ந்து வீழ்கிறது. நம்பிக்கையை இழப்பது தான் ஒருவன் வாழ்வில் என்றுமே நிகழக்கூடாதவொன்று  எனலாம். நம் பலம் ஓய்ந்து போகிற எந்த வேளையிலும், நாம் நம்பிச் சார்ந்து இருக்க வேண்டியது, அவர் நமக்குக் கொடுத்த வாக்குறுதியை; “நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன்.” எரேமியா 29:11 நம் தேவனின் வாக்கோ, திட்டமோ ஒருபோதும் தவறுவதில்லை என்ற உண்மை நம்மை, நம் மனதை, ஆன்மாவை உயிர்ப்பிக்க வேண்டும், உரமூட்ட வேண்டும். “நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்கு வலிமையையும் ஓய்வையும் கொடுப்பேன்.”  எரேமியா 31:25 எஞ்சிய இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் தேவனின் வாக்கை நம்பி வழிநடப்போம், ஏனென்றால் நம்மை பெலப்படுத்துகிற பணியையும், ஓய்வளிக்கும் செயலையும் அவர் பொறுப்பெடுப்பதாக திரும்பத்  திரும்பக் குரல் கொடுக்கிறார். எதை இழந்தாலும் அவர் மேலுள்ள இந்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதிருப்போம்.

 

அப்பா, எங்கள் ஆன்மாவை வலிமையூட்டித் தேற்றுவதற்காக நன்றி கூறுகிறோம் உன் பரிசுத்த ஆவியார் தாமே உம் வாக்குறுதியை நம்பிக் காத்திருக்கச் செய்வாராக. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.